மணல் கடத்தல் குறித்து காவல்துறைக்கு தெரியாமல் இருக்காது; நீதிபதிகள் தகவல்

காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை... நெல்லையில் காவல்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பு இல்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகளவில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. இது தொடர்பான பல வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணல் கடத்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் ஓடை தடுப்பணை தாமிரபரணி ஆற்றில் கலக்கும் நீர் மட்டத்தை அதிகரிக்க காரணமாக இருக்கிறது என்றும் அந்த இடத்தில் கேரளாவைச் சேர்ந்த நபருக்கு எம்.சாண்ட் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த நபர் அதிகளவில் மணலை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மணல் கடத்தல் தொடர்பான இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை என்றும் போலீசாருக்கு தெரியாமல் நடந்திருக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் மணல் கடத்தலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்.24 ஆம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.