போதை பொருள் விவகாரம்: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை

போதை பொருள் விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் விவகாரம் பாலிவுட் மற்றும் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோர் போதைபோருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்பட ஒரு சில நடிகைகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அஜித் நடித்த 'விவேகம்' மற்றும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான விவேக் ஓபராய் பெயரும் இந்த போதை பொருள் விவகாரத்தால் அடிபடுகிறது.

நடிகர் விவேக் ஓபராய் உறவினர் ஆதித்யா ஆல்வா என்பவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் விவேக் ஓபராய் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவேக் ஓப்ராய் உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வீட்டில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.