தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியார் உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்! சுயமரியாதைச் சுடர் வெல்க! என்று பதிவிட்டுள்ளார்.