பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ரூ. 2,500 வரவேற்கத்தக்கது- நடிகை குஷ்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு மதுரை புறநகர் மாவட்டம் ஊமச்சிகுளம், மாங்குளம், குன்னத்தூர், ஆகிய இடங்களில் விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் பெறும் நன்மை குறித்து கலந்துரையாடல் செய்தார்.

இதற்காக நடிகை குஷ்பு சென்னையிலிருந்து மதுரைக்கு இன்று விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜ.க. அரசு விவசாயிகளின் நலன் கருதி மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் நன்மை பெறுவார்கள்.

வட இந்தியாவில் மட்டும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திசைதிருப்பி இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டுகிறார்கள். ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தமிழக அரசு தந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபடியாக தான் தற்போது பொங்கல் பரிசாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 2500 அறிவித்திருக்கின்றார்.

தற்போது கொரோனா காலத்திற்கு பின்னர் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். எனவே பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,500 வரவேற்கத்தக்கது. இதில் ஒன்றும் தவறில்லை என்று அவர் கூறினார்.