புதிதாக 13 பேரை புதிய கார்டினல்களாக நியமிப்பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் கார்டினல்கள் பதவி வகிக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின்படி 120 பேர் கார்டினல்களாக பதவி வகிப்பார்கள். தேவைப்படும் போது கார்டினல்களில் ஒருவரே புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுகிறார். கார்டினல்களில் அதிகமான வாக்களவு யார் பெறுகிறாரோ அவர்தான் புதிய போப் ஆக முடியும்.

இந்த கார்டினல்களை போப் ஆண்டவர் நியமிப்பார். கார்டினல்களாக பதவி வகிப்பவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய முடியாது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் நேற்று புதிதாக 13 பேரை புதிய கார்டினல்களாக நியமிப்பதாக அறிவித்து உள்ளார். அவர்களுடைய பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

அதில் வாடிகன் நகரைச் சேர்ந்த பி‌ஷப்களின் செயலாளர் மார்டிஸ், இத்தாலியைச் சேர்ந்த புனிதர்கள் சபைத் தலைவரான பேராயர் மார்சலோ செமராரோ, ருவாண்டா கிகாபி பேராயர் அன்டோயில் கம்பந்தா, வாஷிங்டன் பேராயர் ஹில்டன் டி.கிரகோரி, பிலிப்பைன்ஸ் பேராயர் கெலஸ்டியானோ ஆஸ் பிரக்கோ, புருனே பேராயர் கொர்னேலியஸ்சிம், இத்தாலி சியெனா பேராயர் பாவ்லோ ஜூடியஸ், இத்தாலி புனிதபிரான்சிஸ் பாதுகாவலர் பேராயர் ரோகாம்பெட்டி ஆகிய 9 பேர் 80 வயதுக்கும் குறைவானவர்கள்.

மீதம் உள்ள 4 பேர் 80 வயதைக் கடந்தவர்கள். புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள 13 கார்டினல்களும் அடுத்த மாதம் 28-ந் தேதி பொறுப்பு ஏற்க உள்ளனர். பேராயர்களாக இருந்து கார்டினல்களாக பதவி உயர்வு பெறும் இவர்கள் அன்று நடைபெறும் வழிபாட்டில் கார்டினல்களாக பொறுப்பு ஏற்கிறார்கள். இவர்களையும் சேர்த்து கார்டினல்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரிக்கும்.