ஜப்பான் சிபா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிபா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிபா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

5 நிமிடத்துக்கும் மேலாக இந்த நிலநடுக்கம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வால் அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

பின்னர் அவர்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயமடைந்ததாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.