இந்தியாவிற்கு 2 நாட்கள் பயணமாக செல்கிறார் அதிபர் ரணில்

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.

தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவி கேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.

தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.