தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.

நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார். தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தநிலையில், தற்போது டெல்லியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியில் இருந்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.