பீகாரில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள்

பீகாரில் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று நடைபெறும் ஜனநாயக திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையை படைக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இருப்பினும், முக கவசங்களை அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியம் ஆகும் என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெறும் தேர்தலில், மொத்தம் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மூன்று கட்டமாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.