ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் - ஒவைசி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பின் ராமர் கோவில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இந்நிலையில் இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். மேலும், கோவில் கட்டுவதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

தற்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். அசாதுதீன் ஒவைசி, ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியா மதச்சார்பின்மை நாடு. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் பிரதமர் பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்று பிரதமர் கூறுகிறார். நானும் அதே உணர்ச்சிவசப்படுகிறேன். ஏனென்றால், குடியுரிமையின் சகவாழ்வு மற்றும் சமத்துவத்தை நான் நம்புகிறேன். மதிப்பிற்குரிய பிரதமரே, ஒரு மசூதி 450 ஆண்டுகளாக அங்கே இருந்தற்காக நானும் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று கூறினார்.