மயில்களுக்கு உணவளித்து மகிழும் பிரதமர் நரேந்திர மோடி

மயில்களுக்கு உணவு... பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டில் வளர்க்கும் மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட வீடியோவில் அவரது காலை உடற்பயிற்சியின் போது தனது வீட்டில் மயில்களுக்கு உணவளிப்பதைக் காணலாம். லோக் கல்யாண் மார்க் இல்லத்திற்குள் பிரதமரின் வீட்டிலிருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி நடைப்பயணத்தின் சில காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உடற்பயிற்சியின் போது மயில்கள் பெரும்பாலும் வழக்கமான தோழர்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. விலைமதிப்பற்ற தருணங்கள் என்ற தலைப்பு மற்றும் இந்தி கவிதையுடன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என இரண்டிலும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ வைரலாகத் தொடங்கியுள்ளது. 1.17 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவை டிவிட்டரில் மட்டும் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதே போல, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

பிரதமர் நடைபயிற்சி செய்யும்போது மயில்கள் அழகாக தோகை விரித்துக்காணப்படுவது மிகவும் அழகாக இருப்பதாக அந்த வீடியோவைப் பார்த்த பலர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.