இந்திய பிரதமர் மோடியுடன் பிரதமர் ட்ரூடோ தொலைபேசியில் பேச்சு வார்த்தை

சீனாவுடனான எல்லை பிரச்னை, கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடைமுறை எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் நிலவும் சூழல் உட்பட பிராந்திய மற்றும் உலகலாவிய விஷயங்களை பற்றி பிரதமர்கள் விவாதித்தனர் என கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவே துவங்கினார். 2018-ல் கனடாவில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவேயின் மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

அப்போதிலிருந்து சீனா அதிகாரப்பூர்வமற்ற பொருளாதார தடைகளை கனடா மீது சுமத்துகிறது. தூதரக அதிகாரி உட்பட 2 கனடா நாட்டினரை தன்னிச்சையாக கைது செய்து, அவர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனையும் விதித்துள்ளது. இந்த நிலையில் இந்திய தரப்பில் வெளியான அறிக்கையில், எல்லைப் பிரச்னை குறித்து பேசியதாக குறிப்பிடப்படவில்லை. கொரோனா தொற்று நோயின் தாக்கம் உரையாடலின் ஒரு பகுதியாக இருந்தது. கொரோனாவுக்கு பிந்தைய உலகில் இரு நாடுகளும் நன்மைக்கான சக்தியாக இருக்கும் என தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கு கனடா வழங்கிய உதவியை பிரதமர் மோடி அன்புடன் பாராட்டினார். இவ்வாறு இந்தியா சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற இடத்திற்கு கனடா வேட்புமனு செய்துள்ளது. அதற்கான ஆதரவைக் கோரி பல்வேறு நாடுகளின் தலைவர்களை ட்ரூடோ கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டு பேசி வருவது குறிப்பிடத்தக்கது.