சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்த பிரதமர் அறிவுறுத்தல்

பிரதமர் ஆலோசனை... உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்த சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

இதுவரை சுற்றுலா நகரங்களுக்கு செல்வதற்கான வீதிகள் மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்படும் அனைத்து வீதிகளையும் புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், தங்களது சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.