கூடு கட்டிய பறவைக்காக தன் விலை உயர்ந்த காரை பயன்படுத்தாமல் உள்ள துபாய் இளவரசர்

பறவைக்காக விலை உயர்ந்த தன் காரை பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விலை உயர்ந்த காரில் பறவை ஒன்று கூடு கட்ட, அந்த பறவைக்காக, காரை பயன்படுத்தாமல் இருக்கும் துபாய் இளவரசரின் மனிதாபிமான நடவடிக்கை, சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று தந்துள்ளது.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியுள்ளது. முட்டைகளுடன் தனது கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர்.

மேலும் அதன் அருகில் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். பறவைக்கு இடைஞ்சலாக யாரும் பக்கத்தில் செல்லக்கூடாது என்பதற்காக, காரை சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் பாதுகாப்பு வளையமாக வைக்கப்பட்டுள்ளது.

தனது காரையும், அதில் உள்ள பறவையையும், இளவரசர், வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலானது. பறவைக்காக அவர் எடுத்துள்ள மனிதாபிமான நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.