புதிய அமைச்சரவை கூட்டத்தில் வரவு செலவு திட்டத்திற்கு முன்னுரிமை

புதிய வரவு செலவு திட்டம்... புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் அரசியலமைப்பு மாற்றங்களுக்கான முன்மொழிவுகளை அங்கீகரிப்பதற்கும், புதிய வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதிலும் முன்னுரிமை அளிக்கும் என்று அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு மக்கள் ஒரு பெரிய ஆணையை வழங்கியதாகவும், எனவே புதிய அமைச்சரவை இந்த செயன்முறையைத் தொடங்க அங்கீகாரம் வழங்க முன்னுரிமை அளிக்கும் என்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 அமைச்சர்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் 40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று கண்டியில் பதவியேற்க உள்ளனர். இதில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜாங்க அமைச்சைப் பெறுவார் என அறியமுடிகின்றது.

கண்டியன் மன்னர்களின் பார்வையாளர் மண்டபமாக இருக்கும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ என்றழைக்கப்படும் விழா மண்டபத்தில் பதவியேற்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய அரசாங்கம் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தது பதவிப்பிரமாணம் செய்து வருகின்றது. அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரம் ருவன்வெலிசேய அருகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து பண்டைய வரலாற்றில் புத்தர் பார்வையிட்டதாக நம்பப்படும் களனி ராஜமஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இந்நிலையில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சராக இருப்பார், அதே நேரத்தில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கல்வி அமைச்சையும் நீர்ப்பாசன அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் அறியமுடிகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியான சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு அமைச்சரவை பதவிகளும் இரண்டு பேர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் பெறும் அதேவேளை பந்துல குணவர்தன வர்த்தக அமைச்சராக பதவியேற்பார் என்றும் அறிய முடிகின்றது.