சென்னையில் நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் நாளை 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் இணைந்து நாளை 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை 32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.