பெண்ணை துன்புறுத்திய கணவன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திருமணமான பெண் அடித்து துன்புறுத்தல்... மத்தியப் பிரதேச மாநிலத்தில் முறை தவறி நடந்துகொண்டதாக கூறி ஒரு பெண்ணை, தனது கணவரை தூக்கிக் கொண்டு நடக்க வைத்து கிராம மக்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே தனது மனைவி வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஒருவருடன் நட்பில் இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் கணவன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு தண்டனை வழங்க முடிவு செய்த கிராம மக்கள் அவரது கணவனை தூக்கிக் கொண்டு சாலையில் நடக்க வைத்துள்ளனர்.

மேலும் அவரின் பின்னால் சென்ற கிராமமக்கள் குச்சியால் அந்த பெண்ணை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண் தனது கணவனை தூக்கிச் செல்கிறார். சிறிது தூரம் சென்றதும் கணவரின் எடை தாங்காமல் நிலைத்தடுமாறும் அந்த பெண்ணை கிராம மக்கள் குச்சி மற்றும் இதர பொருட்களால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை, மாறாக அந்த பெண் வேதனைப்படும் காட்சிகளை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.