டிடிஎப் வாசனால் ஏற்பட்ட விவகாரம்... புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு

கடலூர்: பாய்ந்தது வழக்கு... கடலூர், புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க யூடியூபர் டிடிஎஃப் வாசன் வந்தார். இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பி, வாகனத்தை தாறுமாறாக நிறுத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்துமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர்.

இருப்பினும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அங்கு வந்த டிடிஎஃப் ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர். அதன்பிறகு டிடிஎஃப் மீண்டும் புறப்படும்போது அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியபடி அந்தப் பகுதியில் இருந்து சென்றனர்.

அப்போது புதுபாளையம் ஆற்றங்கரை பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது அந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதன் பிறகு போலீசார் அந்த பகுதியில் கூடுதலாக ஒலிஎழுப்பிய வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் என 200க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை கைப்பற்றி அவர்கள் மீது பதிவு செய்தனர்.

தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்டது. தற்போது யூடியூபர் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டுதல், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.