புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு

கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு... புதுக்கோட்டை, மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சமையல் கலை நிபுணர் தலைமையில் தினமும் தரமான உணவு சமைத்து வழங்கப்படுகிறது. வாரத்தில் நான்கு நாள்களும் கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி , அரசு மன்னர் கல்லூரி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். தனது சொந்த மாவட்ட நோயாளிகளுக்கு நல்ல சத்தான உணவு வகைகளை அளித்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டு , அங்கு உணவு மொத்தமாக தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரபல சமையல் கலை நிபுணர் உள்ள ஆத்தங்குடி பெருமாள் தலைமையில் உணவு வகைகள் ருசியுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வாரத்துக்கு நான்கு நாள்கள் அசைவ உணவும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இங்கிருந்தே உணவுகள் சப்ளை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ்பாபு கோழிக்கறி, சிக்கன் சூப் உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்த பிறகே உணவு கொரோனா நோயாளிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது தவிர தினந்தோறும் சிறு தானிய வகைகள் எலுமிச்சை இஞ்சி கலந்த ஜூஸ் டீ ஆகியவையும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.