வரும் நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; பிரதமர் மோடி அறிவிப்பு

ஊரடங்கு விதிகளை மீறி சிலர் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச்
25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம். இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஊரடங்கு காரணமாக கொரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கூடுதல் கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு விதிகளை ஒரு நபர் மீறுவது கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமம்.

ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை. கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு சமயத்தில் சுமார் 80 கோடி மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு மக்கள் இந்தியாவில் பலன் அடைந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. விவசாயிகளுக்கு சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிய தவறுக்கு கூட இடங்கொடுக்க கூடாது. பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை சீராகவே உள்ளது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், இந்தியாவின் நிலைமை சீராகவே உள்ளது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நிலைமை சீராக உள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படக் கூடும். இதுபோன்ற நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்

நாள்தோறும் பல முறை 20 விநாடிகளுக்கு கைகழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஏழை மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை மத்திய அரசின் நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்டது. முழுஊரடங்கு காலத்தைப் போலவே, விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.