ஹத்ராஸுக்கு நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கைது

ராகுல் காந்தி கைது... ஹத்ராஸுக்கு நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்தை சந்திப்பதற்காக ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் யமுனா நெடுஞ்சாலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து நொய்டாவில் இருந்து ஹத்ராஸ் நகருக்கு இருவரும் நடந்தே சென்றனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹத்ராஸில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் என ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதேபோல் போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அகம்பாவம் பிடித்த அரசால் தங்களை தடுத்து நிறுத்த முடியாது என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.