சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருசில பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.