சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது. 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகரில் 20% ஆக இருந்த வீடுகள் தற்போது 80% ஆக மாறி உள்ளன. 2015ல் மட்டுமல்ல அதுக்கு முன்பிருந்தே சென்னையில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் இருந்துள்ளது.

மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தீர்க்க நிதி ஆதாரமும் தேவை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிதி ஆதாரம் இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும். அரசின் தொடர் நடவடிக்கையால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது என்று கூறினார்.