சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா புகார் அளித்தது. அதன்படி, 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 21-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, வரும் 24ம் தேதி வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தனர்.

மேலும், இவ்விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மனு விசாரணையின் போது, மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.