புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் அசோக் லாவசா வரும் 31ம் தேதி ராஜினாமா செய்யவிருப்பதால், அப்பொறுப்புக்கு ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜீவ் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து நிதித்துறைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறு குறு நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடனுதவி வழங்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசுக்கு வடிவமைத்து கொடுத்ததில் ராஜீவ் குமாரின் பங்கு முக்கியமானது.