அரிட்டாபட்டி மலைகளில் அரிய வகை பறவைகள்

அரிட்டாபட்டி கிராமம் மேலூரின் அருகே ஏழுமலை குன்றுகள் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகளில் அரிய வகை பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பறவைகளை கண்டறிந்து பதிவிடும் பணியில் தமிழக பறவை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரிட்டாபட்டிக்கு பறவை ஆர்வலர்கள் அதிநவீன கேமராக்களுடன் வந்து மலைப்பகுதியில் அரிய பறவைகளை கண்டறிந்து வருகின்றனர். ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு குழுவாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாரம் மதுரையை சேர்ந்த பறவை ஆர்வலர்கள் விநாயகம், ராமன், ஆதி உள்பட ஏழு பேர் அடங்கிய குழுவினர் அரிய வகை பறவைகள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அரிட்டாபட்டி பல்லுயிர் பாதுகாப்பு தலைவர் ரவிசந்திரன் இவர்களுக்கு பறவைகளை காண்பித்தார்.

வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை அதிகமான அரியவகை பறவைகள் காணப்பட்டன. ஊதா முகம் கொண்ட பறவை, ராஜஸ்தானில் மட்டுமே உயரமான இடத்தில் வாழும் லகடு வல்லூறு பறவை, பாம்பு தின்னி கழுகு, கோல்டன் குருவி, மின்னல் வேக குருவி உள்ளிட்ட வேறெங்கும் காணாத அரிய பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.