மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி பணி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர்.

மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அந்த கிராம ஊராட்சியில் வசிக்க வேண்டும், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அரசு, விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், பட்டியலின பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி துறை அனுப்பி வைத்துள்ளது.