செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு... காஞ்சிபுரம் ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.


மக்கள் பாதுகாப்பு கருதி, முன்னதாகவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து செல்லக்கூடிய உபரி நீர் கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகபட்சமாக 1, 800 கன அடி முதல் , குறைந்தபட்சமாக 150 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை நிலவரப்படி மட்டும் வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே இதன் காரணமாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், தற்போது 21 அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 4 நாட்களாகவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.