குடியரசு தினம் ... எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிப்பு


சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் குடியரசு தின வாழ்த்து ... நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இது தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் சமஉரிமை, சாமானியருக்கும் சமநீதி, வேறுபாடற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்ட நன்னாளான குடியரசு தினத்தில், மக்களாட்சி மலர பாடுபட்ட மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குகிறேன் என அவர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்நியர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்த பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த திருநாளான ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்! என அவர் கூறியுள்ளார்.