சிறைபிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை

நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும், விரட்டியடித்தும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த நான்கு விசைப்படகுகளையும், அதில் இருந்த 29 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 22 மீனவர்களை இலங்கையில் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு படகையும், அதில் இருந்த ஏழு மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

29 மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வரும் வரையிலும் 29 பேரையும் கடற்படை முகாமிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்பே 29 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்களா அல்லது எச்சரிக்கை செய்து மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்களா என்பது குறித்து தெரியவரும்.

இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேரையும், நான்கு விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.