நிரவ் மோடி சொத்துகளை ஏலம் விட்டு ரூ.24 கோடி மீட்பு

அமெரிக்காவில் நிரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டு ரூ.24 கோடியை பஞ்சாப் நேஷ்னல் வங்கி மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்தநிலையில் லண்டன் தப்பிச் சென்ற நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றிய அவரது மனைவி அமிரா மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அமலாக்கத்துறை, இண்டர்போலைக் கோரியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இண்டர்போல் அமிரா மோடிக்கு எதிராக சிவப்பு கார்னர் நோட்டீஸை வெளியிட்டது. அமலாக்க இயக்குநரகத்தின் வேண்டுகோளின் பேரில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிரவ் மோடியின் சகோதரர் நேஹால் மோடி மற்றும் சகோதரி பூர்வி மோடி ஆகியோருக்கு எதிராக இதேபோன்று இன்டர்போல் முன்பு நோட்டீஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்காவில் நிரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டு ரூ.24 கோடியை பஞ்சாப் நேஷ்னல் வங்கி மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.