மக்களிடையே இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டி எழுப்புகின்றனர்; அநுர குமார திசாநாயக்க குற்றச்சாட்டு

இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்புகின்றனர்... நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பி உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவ தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் அதிகளவான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. நாடே இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது. இவ்வாறு 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டை, மோதல்கள் இல்லாமல் பராமரிக்க நாட்டின் ஆட்சியாளர்களால் இன்னும் முடியவில்லை.

மேலும் ஆட்சியாளர்கள் மீண்டும் இனவெறியின் சேற்றில் மறைந்து விடுவார்கள். இதேவேளை கருணா அம்மான் கிழக்கிற்கு சென்று, இராணுவத்தினரை கொன்றதாக கூறி தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்.

ஒரே கட்சிக்குள் இரண்டு குழுக்களாக செயற்படுகின்றனர். அதாவது தெற்கிற்கு வந்து புலிகள் அமைப்பை தோல்வியடைய செய்தமைக்கு தாங்கள் தான் காரணமென கூறி சிங்கள மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்பார். இவர்கள் மக்களுக்காக சேவையாற்றக் கூடியவர்களுக்கா ஆதரவு வழங்குகிறார்கள். இல்லை பலம் இருக்கும் கட்சிக்கே தங்களின் ஆதரவுகளை வழங்குகின்றனர். மேலும் இவர்கள் தங்களின் இனம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதில்லை.

மாறாக அரசியலில் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலேயே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். தற்போது நாட்டில் காணப்படுவது இனவாத அரசியலாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.