உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்து வந்த ஒடெஸா துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்

ரஷ்யா: தானிய ஏற்றுமதிக்காக உக்ரைன் பயன்படுத்தி வந்த ஒடெஸா துறைமுகம் மீது, ஈரான் வழங்கிய ஷஹித் டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்று தெரிய வந்துள்ளது.

உக்ரைன் நாட்டு தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதாக ரஷ்யா அண்மையில் அறிவித்தது.

சில ஆப்ரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால், தானிய கப்பல்களை அனுமதிக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உடனான சந்திப்பின் போது வலியுறுத்துவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருந்தார்.

சந்திப்பு நடைபெற சில மணி நேரமே இருந்த நிலையில், ஒடெஸா துறைமுகத்தில் உள்ள தானிய கிடங்குகளை குறி வைத்து ரஷ்யா 32 டிரோன்களை ஏவியதாகவும், அதில் 23 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.