ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டார்

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்ஸி நவல்னி, அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டபோது, சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. பின்னர், ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் கூறினர். தற்போது நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பெர்லின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதில், நவல்னியின் உடலில் கலந்துள்ள நோவிசோக் நச்சு விஷம் எந்த அளவிற்கு நீண்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போதைய நிலைமையில் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு விஷம் கொடுத்தது யார் என்பது போன்ற தகவல்களை கூடிய விரைவில் ரஷியா தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடைகளை ரஷியா சந்திக்க நேரிடும் என ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.