ஜெர்மனியில் சிகிச்சைபெற்று வரும் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்ஸி நவல்னி, பல ஆண்டுகளாக அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டபோது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது, நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது.

ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட நவல்னிக்கு பெர்லினில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னிஉள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.

தற்போது, நவல்னி வெண்டிலேட்டர் உதவியில்லாமல் தன்னிச்சையாக சுவாசிக்கும் அளவுக்கு அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நவல்னி, ஹாய் நான் நவல்னி, உங்களை பிரிந்திருப்பது வருத்தமாக உள்ளது. எந்த ஒரு சுவாவசக்கருவி, ஆக்சிஜன் குழாய்களின் உதவி இல்லாமல் நேற்று முழுவதும் என்னால் சொந்தமாக சுவாசிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.