பாரதீய ஜனதாவிடம் இருந்து சிவசேனாவை பிரிக்க செய்த அரசியல் தந்திரத்தை ஒப்புக்கொண்ட சரத்பவார்

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணியை முறித்து தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்தபின், பாரதீய ஜனதாவுக்கு உதவ சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது. பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.

ஆனால் பாரதீய ஜனதாவுடன் சிவசேனா இணைந்து கொண்டது. இதனால் சரத்பவாரின் இந்த அறிவிப்பு பலனற்று போனது. அதன்பின் பாஜகவுடனான உறவை சிவசேனா துண்டித்து விட்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிவசேனாவின் சாம்னாவுக்கு சரத்பவார் பேட்டி அளித்தபோது, 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் மீண்டும் இணைவதை நான் விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கலாம் என உணர்ந்ததன் காரணமாக வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தேன். ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், மராட்டியத்தில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த அனுமதிப்பது சிவசேனா மற்றும் மற்ற கட்சிகளின் நலனுக்கு உகந்ததல்ல என்பதை அறிவேன். மற்ற அனைத்து கட்சிகளும் ஆபத்தை எதிர்கொள்வதை நான் அறிவேன். வெளியில் இருந்து ஆதரவளிப்பாக கூறியது அரசியல் தந்திரம்.அப்போது பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான பிளவை அதிகமாக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்றுதெரிவித்துள்ளார்.