சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 காவலர்களை கைது செய்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.

பின்னர் நீதிபதிகள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள்? என கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.

5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தபட்டுள்ளது எனக் கூறினார்.

இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர். மேலும் பெண் காவலர் ரேவதி மற்றும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.