சென்னை: தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நல திட்ட உதவிகளை செயல்படுத்தி கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை வைத்தே பள்ளிக்கு வெள்ளையடிப்பது, பள்ளியில் அதிகளவில் வளர்ந்துள்ள புற்களை அகற்றுவது ஆகிய வேலைகளை செய்ய சொல்கின்றனர்.
மேலும், மாணவனுக்கு தண்டனை என்றாலும் கூட பள்ளிகளில் உள்ள வேலைகளை பள்ளி நிர்வாகம் மாணவர்களை செய்ய சொல்கின்றனர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விளையாட்டு வேளையில் விளையாட்டு அரங்கத்தில் முளைத்திருக்கும் புற்களை அகற்றுவது.
இதையடுத்து விளையாட்டு அரங்கத்தை செம்மைப்படுத்துவது மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துவது ஆகிய வேலைகளை செய்ய சொல்கின்றனர். இதனால், சில மாணவர்களின் பெற்றோர்களும் புகாரளித்துள்ளனர்.
இதற்கு இடையே, பள்ளிகளில் உள்ள வேலைகளை மாணவர்களை வைத்து செய்ய கூடாது எனவும், எக்காரணம் கொண்டும் தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள தூய்மைப்பணிகளை 100 நாள் வேலைத்திட்ட வேலையாட்களை கொண்டு செய்ய சொல்லலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.