பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி ... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துமவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை ( கேஸ்ட்ரிக்) ஏற்பட்டது தெரியவந்தது.


எனவே அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. தகவலறிந்த திமுகவினர், அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர்.

மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நாராயணா இருதயாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.