குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி... போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் ஜெயசூர்யா (வயது 7). உலகம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ஜெயசூர்யா, தனது அண்ணன் ஜீவா (8) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் (7) ஆகியோருடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாயாண்டிகுளத்திற்கு குளிக்க சென்றான்.

குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு ஜெயசூர்யா சென்றதாக கூறப்படுகிறது. அதில் அவன் நீரில் மூழ்கினான். இதை பார்த்த மதன், ஜீவா ஆகியோர் காப்பாத்துங்க... காப்பாத்துங்க... காப்பாத்துங்க... என்று கூச்சலிட்டனர்.

அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து குளத்தில் மூழ்கிய ஜெயசூர்யாவை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவனை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டாகள் ஏற்கனவே ஜெயசூர்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.