இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஜூன் 20 முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்

இலங்கை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் நீடித்து வரும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து மிகவும் ஸ்தம்பித்துள்ளது.

இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத்தும் குறைந்த அளவு ஊழியர்களுடன் தங்களது சேவைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சகத்தின் உத்தரவின் படி, ‘பொது போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்ய இயலாமை காரணமாக, வேலைக்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு செலுத்த வேண்டிய பணம் இல்லாததால், இலங்கையில் தற்போது பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதாக இலங்கை அதிகாரிகள் நேற்று அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அந்த வகையில் வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மின்சாரம் இருந்தால் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கற்பித்தல் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில், எரிபொருளை சேமிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு அலுவலக ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் விடுமுறையை அளித்து, அன்று ஒரு நாள் மட்டும் விவசாய பணிகளை கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.