வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை சுத்திகரித்து பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள இப்போது அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகி விட்டது. வான்வழியாக பறக்கிற துகள்களின் பரவலை குறைக்க இந்த முக கவசங்கள் அணிய வேண்டும் என அமெரிக்காவின் கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்பட பலரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முக கவசம் அணியாத மற்றும் மருத்துவ தர அறுவை சிகிச்சை முக கவசம், இரு வகை என்-95 முக கவசங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட காகித முக கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தி முக கவசம் அணிந்த தன்னார்வலர்களிடம் துகள்களின் ஓட்டத்தை அளவிடுவதற்கான சோதனைகள் நடத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக கவசங்கள் மற்றும் முக ஷீல்டுகள் முக்கிய கருவிகளாக மாறி உள்ளன.

மருத்துவ தர அறுவை சிகிச்சை முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் பேசும்போதும், இருமும்போதும் வெளிப்படும் வான்வழி துகள்களை 90 சதவீதம் தடுத்தது தெரிய வந்தது. அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான முக கவசங்களின் துணியிலிருந்து சிறிய அளவிலான இழைகள் (துகள்களாக) வெளியே விடுவிக்கப்பட்டு வந்தன.

வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பெரிய துகள்களின் பரவலை குறைப்பத்தில் பயனுள்ளதாக இருக்கிறபோது, அந்த முக கவசங்களை தவறாமல் சுத்திகரித்து பயன்படுத்துவது முக்கியம். வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களே துகள்களை வெளியிடுவதால், அவை காற்றில் வெளியேற்றப்பட்ட துகள்களை தடுத்தனவா என்று சொல்வது கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.