வவுனியா தேவாலயங்களுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகள்... வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தார்.

வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழைமை) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனந்தெரியாத நபர் அண்மையில் வருகைதந்த விடயம் தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்விடயத்தினை கருத்திற்கொண்டும் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில், அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு கூறுகையில், “இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகமான மக்கள் தேவாலயங்களிற்கு வருகை தருவர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. மாறாக வெடிகுண்டு மிரட்டல்கள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை” என்றார்.