சிவசேனா பால்தாக்ரேவின் கொள்கைகளை கைவிட்டுவிட்டது - கங்கனா ரனாவத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளதாக நடிகை கங்கனா சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அங்கு ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. இந்நிலையில் கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர்.

அதன்பின், மும்பை ஐகோர்ட்டின் இந்த விஷயத்தில் தலையீட்டு, அதற்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தனது சொந்த ஊரிலிருந்து நேற்று மும்பை வந்த நடிகை கங்கனா தனது வீடு இடிக்கப்பட்டதற்கு கடும் கோபமடைந்து ஆவேசத்துடன் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீடு இடிக்கப்பட்டது போல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், இன்று அனுகூலமாக உள்ள காலம் எப்போதும் அப்படியே இராது. சிவசேனா மீதான கடுமையான தாக்குதலில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம் அதிகாரத்திற்காக விற்கப்பட்டது என்று தீவிரமாக கூறியுள்ளார்.

மேலும் அவர், கட்சியை சோனியா சேனா என்று முத்திரை குத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியை கண்டித்து, அதை ஒரு குடிமை அமைப்பு என்று அழைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.