அடக்கம் செய்ததாக நினைத்த முதியவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

எர்ணாகுளம்: உயிருடன் வந்த முதியவர்... கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உடலை கல்லறையில் அடக்கம் செய்த பின்னர் ஏழாவது நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியின் போது முதியவர் உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆலுவாவைச் சேர்ந்த 68 வயதான ஆண்டனி என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்த நிலையில், கடந்த 14ம் தேதி அங்கமாலி பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு முதியவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சில அங்க அடையாளங்கள் மூலம் இறந்தது ஆண்டனி என்று தான் கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் உடலை பெற்று ஆழ்வார் செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர். இந்நிலையில் நேற்று ஏழாவது நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்ற போது தற்செயலாக ஆண்டனி உயிருடன் ஊருக்கு வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அங்கமாலி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி இறந்தவர் ஆண்டனி இல்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அடக்கம் செய்த உடல் யாருடையது என்பது குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர்.