தற்கொலை செய்து கொண்ட மாணவர் குறித்த அதிர்ச்சி தகவல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக நீட் தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று மாணவர்கள் பலியான நிலையில் அதில் ஒருவர் பிளஸ் டூ தேர்வில் வெறும் 595 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

தர்மபுரியில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஆதித்யா குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த போது கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய ஆதித்யா 1200க்கு வெறும் 595 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஆதித்யாவை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்தால் நேரடியாகவே எம்பிபிஎஸ் படிக்க வைக்கலாம் என்று அவரது தந்தை முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் அவர் கடன் வாங்கி சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் முதல் முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஆதித்யாவை இரண்டாவது முறையும் எழுதும்படி அவரது பெற்றோர்கள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரண்டாவதாக தேர்வு எழுதும் முன் மன அழுத்தம் காரணமாக அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

பிளஸ் டூ தேர்வில் வெறும் 595 மதிப்பெண்கள் மட்டும் பெற்ற ஒரு மாணவரால் எப்படி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என பெற்றோர்கள் யோசிக்காமல் வலுக்கட்டாயமாக அவரை நீட் தேர்வு எழுதும் படி வற்புறுத்தி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த வகையிலும் வற்புறுத்தாமல் அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.