வரும் 14ம் தேதி சேலம் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு... 'வரும், 14ல், சேலம் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என, தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாமக்கல்லில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு, தார்மீக ஆதரவை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இலவச மின்சார சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சேர்க்கக் கூடாது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 14ல், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து, மாவட்டம் வாரியாக போராட்டங்களை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.