பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நல்லடக்கம்

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.