கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி உரிமை சட்டம்

நியூயார்க்: நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு சம்பவங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.

சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப் பள்ளியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அமெரிக்க முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்தார். அதன்படி நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கவச உடை போன்றவற்றை பொதுமக்கள் வாங்கவும் இந்த சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.