இஸ்லாமியர் சடலங்களை அடக்கம் செய்ய கோரி போராட்டம்

போராட்டம்... இஸ்லாமியர்களின் சடலங்களை (ஜனாசாக்களை) எரிக்காது அடக்கம் செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

உலக நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று இஸ்லாமிய சமய முறைக்கமைவாக ஜனாசாவை எரிக்க வேண்டாம் எனவும் மத அனுஸ்டானங்களிற்கு ஏற்ற வகையில் அதனை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.